Thursday, March 22, 2012

ஆப்பிளின் தமிழ்ப்பெயர் எத்தனை பேருக்கு தெரியும். தமிழ்க்கவிதைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பழம் ஆப்பிளாகத்தான் இருக்கும். ஆதாம் ஏவாள் சாப்பிட்ட பழமாச்சே. ஆனால் பெரும்பாலும் தமிழிலும் ஆப்பிள் என்றே குறிப்பிடுகின்றனர். தெரிந்துக்கொள்ளுங்கள், ஆப்பிளின் தமிழ்ப்பெயர் அரத்திப்பழம். இன்னும் சில பழங்கள்: ஆரஞ்சு - நரந்தம்பழம், ஸ்ட்ராபெர்ரி – செம்புற்றுப்பழம், WaterMelon – குமட்டிப்பழம் அல்லது தர்பூசணி. ஆங்... பதிவர்கள் முக்கியமா தெரிந்துக்கொள்ள வேண்டியது: லிச்சி – விளச்சிப்பழம்.

மறக்கப்பட்ட பொருட்கள்.. சில புகைப்படங்கள்









அமலாபால்

ஒன்று.

எனக்கு கண்ணில் ஏதோ பிரச்சினை.

இரண்டு.

இப்போது தமிழர்களுக்கு ரசனைக்குறைவு.

இந்த இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கிறது.

ஏன் தமிழர்கள் போயும், போயும் இந்த அமலாபாலை போய் ரசியோ, ரசியென்று இப்படி ரசித்துத் தொலைக்கிறார்கள் என்றே புரியவில்லை. தயாரிப்பாளர்களோ ஒருபடி மேலே போய் அவர் வீட்டு முன்பாக, நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வியாழக்கிழமைகளில் நீள்வது மாதிரியான க்யூவில் அட்வான்ஸ் பணத்தோடு நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.

லோ பட்ஜெட் படங்களில் ஹீரோயினுக்கு தங்கையாக வருவதற்கோ அல்லது க்ரூப் டேன்ஸர்களில் முன்வரிசையில் ஆடுமளவுக்கோதான் அவருக்கு அழகு இருப்பதாக கருத வேண்டியிருக்கிறது. ரிச் கேர்ள்ஸ் ஆக கூட அமலாபால் செலக்ட் ஆயிருந்தாலே அது அதிசயம். கத்தி மாதிரி கண்களைத் தவிர்த்து வேறெதுவும் அவருக்கு ப்ளஸ்ஸாக இருப்பதாக தோன்றவேயில்லை. பொதுவாக ஆண்கள் விரும்பும் ‘ப்ளஸ்’ அமலாவைப் பொறுத்தவரை பெரிய ‘ப்ளஸ்’ இல்லை என்பதை அவருடைய எல்லாப் படங்களையும், உறுத்து உறுத்துப் பார்த்ததில் உணர்ந்துக் கொண்டேன். அமலாபால் அளவுக்கு சுமாரான அழகிருக்கும் பெண்ணை காதலிப்பதிலோ, கல்யாணம் செய்துக் கொள்வதிலோ எனக்குப் பிரச்சினையில்லை. யதார்த்தத்தில் இவரை விட சுமாராகதான் டிபிக்கல் ஹவுஸ் ஒய்ஃப்கள் இருக்கிறார்கள்.

நிலைமை இப்படியிருக்க, அமலாபால் ஏன் நதியாவைப் போல, கவுதமியைப் போல, சிம்ரனைப் போல இப்போது தமிழ்த் திரையுலகின் உச்சத்தில் இருக்கிறார்?

நிஜமாகவே விடை தெரியாத கேள்விதான் இது.

ஸ்ரீதேவி கோலோச்சியதற்குப் பிறகு சுமார் ஃபிகர்களான அம்பிகா-ராதா சகோதரிகள் தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பினார்கள். அதற்குப் பிறகு கவுதமி. தமிழர்களுக்கு ‘ஒல்லியான’ பெண்களைப் பிடிக்கும் என்றொரு கருத்துருவாக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், புசுபுசுவென புயலாக உள்ளே நுழைந்தார் குஷ்பு. பின்னர் சுகன்யா மாதிரி ஆண்ட்டி லுக் ஃபிகர்களையும் ஆராதித்தார்கள் தமிழர்கள். ஒல்லி சிம்ரன், குண்டு ஜோதிகா என்று ஒரே சமயத்தில் டபுள் சைட் எக்ஸ்ட்ரீம் ரசனையையும் வெளிப்படுத்தி தாவூ தீர வைத்தார்கள். கிரணையும் ரசித்தார்கள். இலியானாவுக்கும் விசில் அடித்தார்கள். இப்போது அமலா பாலை ஆராதிக்கிறார்கள்.

கொஞ்சம் தீவிரமாக சிந்தித்து நம்முடைய கனவுக்கன்னிகளை வரிசைப்படுத்திப் பார்த்தால் சீரான ஒழுங்குவரிசையற்ற ஒருமாதிரியான நான்-லீனியர் தன்மை கொண்ட ரசனையை தமிழன் வெளிப்படுத்தி வருகிறான் என்பது புரியும். இவனுக்கு பிடிப்பது குண்டா, ஒல்லியா.. குள்ளமா, உயரமா.. கருப்பா, சிவப்பா என்று அறுதியிட்டு யாராலும் சுலபமாக வரையறுத்துவிட முடியாது. “சுலக்‌ஷணா கூட எங்க காலத்தில் கனவுக்கன்னி“ என்று சாட்டிங்கில் வந்து அதிரவைக்கிறார் ஒரு ஃபிப்டி ப்ளஸ் நண்பர். ஸ்ரீதேவியை கனவுக்கன்னி என்றால் புரிந்துகொள்ள முடிகிறது. சுலக்‌ஷணா எப்படி கனவுக்கன்னி என்று மண்டையை பிய்த்துக்கொள்ளத்தான் இயலுகிறது.

‘மைனா’ தவிர்த்து வேறெந்த உருப்படியான படத்தில் அமலா பால் நடித்திருக்கிறாரென்று தெரியவில்லை. சிந்து சமவெளி என்கிற விவகாரமான பிட்டே இல்லாத பிட்டு படத்தில் நடித்தது அவருக்கு ஒரு கூடுதல் தகுதியாக இருக்கலாம். இப்படத்தில் நடித்து பரவலானதால்தான் மீண்டும் மீண்டும் விசில் அடிக்கும் ரசிகர்கள் அமலா பால் என்றாலே குஷியாகி தியேட்டர்களுக்கு வருகிறார்களோ என்று யூகிக்கிறேன். அமலாபால் நடித்த சுமார் படங்களை விட, ‘விகடகவி’ மாதிரி மொக்கைப்படங்களே அதிகமென்று அவருடைய கேரியர் கிராப் கூறுகிறது. அப்படியிருந்தும் இன்று தமிழின் நெ.1 மாதிரி அமலாதான் இருக்கிறார்.

கடந்த வருடத்தைவிட அமலா ஃபீவர் இவ்வருடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இரண்டே மாதத்தில் அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாகியிருக்கிறது. வேட்டையின் ’பப்பரப்பா’ பாட்டில் அவருடைய மேக்கப்பை கண்டதுமே பேஜாராகிவிட்டது. இந்த மேக்கப்மேன் முன்னதாக கிரணுக்கு மேக்கப் போட்டவராக இருக்கக்கூடும். ‘படமெடுத்து சொதப்புவது எப்படி?’ என்று பாடமெடுத்த ‘காதலில் சொதப்புவது எப்படி?’யில் அமலா பாலின் மேக்கப் அத்தனை மோசமில்லையென்றாலும், நடிப்பென்றால் கிலோ என்ன விலையென்று தெரியாத அப்பாவியாக சிறப்பாகவே அவர் நடித்திருந்தார். ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ கொடுமை. போதாக்குறைக்கு கிட்டத்தட்ட இரட்டை வேடம். குள்ளமான அமலாபாலுக்கு, படம் முழுக்க மாடர்ன் ட்ரெஸ் வேறு. வசனகர்த்தாவோ மனச்சாட்சியே இல்லாமல் “அவளைப் பார்த்தேன்னா, நீ பொண்ணுங்கிறதையே மறந்துட்டு யூ வில் ஃபால் இன் லவ்” என்றெல்லாம் கவுதமேனத்தனமாக டயலாக் எழுதியிருக்கிறார்.

எனக்கென்னவோ, நம்மூரில் சாணி தட்டும் குணசுந்தரி மாதிரி ஃபிகர்களுக்கு மாடர்ன் ட்ரெஸ் போட்டு, நன்றாக தலைவாரி, லேசாக ப்ரூஸ் பவுடர் போட்டு, லிப்ஸ்டிக் தடவிவிட்டால் அமலாபாலை விட அழகாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

Wednesday, March 21, 2012

பிரசவம்

"ஏங்க கொஞ்சம் வலிக்கிற மாதிரி இருக்குங்க கொஞ்சம் சீக்கிரமாக ஆபிஸுலேர்ந்து வந்திருங்க"

"ஐய்யைய்யோ...இப்போ கிளம்பினா கூட வரதுக்கு முக்கால் மணிநேரம் ஆகுமேமா? நான் வேணா ஜெய்கிட்ட ஃபோன் பண்ணி வரச் சொல்லட்டுமா?"

"வேண்டாம் நீங்க வாங்க..அதுவரைக்கும் பொறுத்துப்பேன்..."

"சரிம்மா உடனே கிளம்பறேன்" அரக்க பரக்க வீட்டுக்கு சென்றடைந்த போது உதட்டைக் கடித்துக் கொண்டு சுவற்றைப் பிடித்து நின்று கொண்டிருந்தாள்

"ரொம்ப வலிக்குதா..ஆஸ்பத்திரிக்கு கிளம்பிப் போலாமா? ஆம்புலன்ஸ கூப்பிடட்டுமா?"

"வேண்டாம் வலி அப்பிடியே தான் இருக்கு கூடல..ஆனா வலிச்சிக்கிட்டே இருக்கு"

"இரு நான் வேணா ஃபோன் பண்ணிக் கேக்கறேன்"

"வலி கூடுகிறதா, உதிரப் போக்கு இருக்கா? பனிக்குடம் உடைந்த மாதிரி தோன்றுகிறதா? நீர் வருகிறதா? எப்போ வலி ஆரம்பித்தது? ஆயிரெத்தெட்டு கேள்வி கேக்கிறாங்க...அதெல்லாம் இல்லைன்னு சொன்னேன்...அப்போ பார்த்துட்டு வாங்கன்னு சொல்றாங்க...எனக்கென்னவோ பயமா இருக்குடா கிளப்பி போயிறலாம்.."

வலிக்கு கடித்துக் கொண்டிருந்த அவளின் உதட்டின் ஓரத்தில் கீற்றாய் ஒரு முறுவல்."பொண்டாட்டி மேல அவ்வளவு கரிசனமா??.."

"நக்கல் விடற நேரமா இது? நானே உதறிக்கிட்டு இருக்கேன்"

"இல்லைங்க இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு கிளம்பலாம் அங்க காத்திட்டு இருக்க வைச்சிருவாங்க எனக்கு அங்க போனா எனக்கு ரொம்ப அன் ஈசீயா இருக்கும்"

அவள் விழியோரங்களில் கண்ணீர் எட்டிப்பார்த்திருந்தது. உதட்டை மறுபடியும் கடித்துக் கொண்டாள். கையைப் பிடித்துக் கொண்டாள்.

"எதாவது சூடா குடிக்க போட்டு தரவா? கற்பகரட்சாம்பிகை விளக்கெண்ணை இருக்கு அம்மா வலி வந்தவுடனே வயித்துல தடவ சொன்னாங்க..."

அவள் என் கைகளை இறுக்கியதிலிருந்து வலி கூடியிருப்பது தெரிந்தது. "இதப் பாரு லூசுத்தனமா பிகேவ் பண்ணாத நான் டாக்ஸிக்கு சொல்றேன் போயிடலாம்..இதுக்குத் தான் இங்க வேணாம் ஊர்ல வைச்சிக்கலாம்னு சொன்னேன்...தைரியத்துக்கு கூட ஒருததரும் இல்லாம..என்ன... " வாயைப் பொத்தினாள்.

"இப்படியே பொலம்பிக்கிட்டிருந்தா எனக்கும் தைரியம் போயிடும்...கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இருக்கியா?"

"இதுக்குத் தான் நான் வேண்டாம்ன்னு சொன்னேன்"

"என்ன வேண்டாம்ன்னு....?? ஹ...யாரு நீ...?" வலிக்கு நடுவிலும் குறும்பாக சிரித்தாள்.

"போட்டேன்னா தெரியுமா...நான் குழந்தை பத்தி சொன்னேன்..இப்போ வேண்டாம்னு நான் சொல்லலை? ஆமா நீ என்ன வலின்னு சொல்லிட்டு என்ன நக்கல் விட்டுக்கிட்டு இருக்க...உண்மையிலேயாவா...இல்ல சும்மா சீன் போட்டு என்னை கலங்கடிக்கிறியா?.." அவள் நடிக்கவில்லை என்று தெரிந்தும் பேச்சுப் போக்கு காட்டினேன்.

"அம்மா...." என்று அவள் முனகிய போது டாக்ஸி வந்திருந்தது.

"மேடு பள்ளம் பார்த்துப் போங்க ப்ளீஸ், வேகமா வேண்டாம் ஆனா சீக்கிரமா போங்க..அந்த வழி சுத்து இப்படி போங்க..."

ஆஸ்பத்திரி வந்த போது அவளால் இறங்க முடியவில்லை கையை இறுக்க பிடித்துக் கொண்டு மடியில் படுத்துக் கொண்டாள்.

"முடியலைடா.."

"கொஞ்சம் பொறுத்துக்கோடா நான் போய் ஸ்ட்ரெட்ச்சர் எடுத்துட்டு வரேன்..."

"எக்ஸ்க்யூஸ்மி என் மனைவிக்கு பிரசவம்...ரொம்ப முடியவில்லை டாக்ஸியில் இருக்கிறாள்...ப்ளீஸ் டாக்டரைக் கூப்பிடுங்கள்...ஸ்டெரெட்சர் எடுத்துக் கொண்டு வரச் சொல்லுங்கள் ப்ளீஸ் சீக்கிரம்..."

"உங்கள் மனைவி எங்கே? உள்ளே கூட்டிக்கொண்டு வாருங்கள்"

"அவள் வலியில் இருக்கிறாள்...வெளியே டாக்ஸியில்"

"பரவாயில்ல மிஸ்டர்...அட்ஜஸ்ட் செய்து வரச்சொல்லுங்கள்...ஸ்ட்ரெட்சர் வார்டிலிருந்து வரனும்..டாக்டர் வரமாட்டார் நர்ஸ் தான் வந்து பார்ப்பார்...இப்பொழுது ஒரு பேஷண்டைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.....பனிக்குடம் உடைந்துவிட்டதா?.."

"என்ன விளையாடறீங்களா...நான் என் மனைவிக்கு முடியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்..நீங்க கூலா கதை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்..."

"நீங்கள் ரொம்ப டென்ஷனாக இருக்கிறீர்கள்...முதலில் அமைதியாகுங்கள்.."

"என்னங்க...அங்கே என் மனைவி துடிச்சிட்டு இருக்கா..நீங்க அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க...அவள முதல்ல அட்மிட் பண்ணுங்க...அப்புறம் நாம பேசுவோம்...மேனேஜர கூப்பிடுங்க..."

"பதட்டப்படால் ஒன்றும் ஆகாது மிஸ்டர்....நர்ஸைக் வந்து பார்ப்பார்..இல்லையென்றால் ஸ்ட்ரெச்சருக்கு காத்திருக்க வேண்டும்..."

டாக்ஸிக்கு ஓடிப் போய் பார்த்தால் டிரைவர் ஓரமாய் நின்று கொண்டு தம் அடித்துக் கொண்டிருந்தான். அவள் கசங்கிப் போய் வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்.
"கொஞ்சம் பொறுத்துக்கோம்மா...இப்போ நர்ஸ் வந்துருவாஙக...என் கையப் பிடிச்சிக்கோ...கடவுள நினைச்சிக்கோ....தோ வந்துருவாங்க..."

ஒடிசலாய் ஒரு நர்ஸ் வந்தாள்..

"யாருக்கு பிரசவம்..."

"அதோ தடிமாடு மாதிரி தம்மடிச்சிகிட்டு இருக்கானே அவனுக்குத் தான் பிரசவம்..என்னா விளையாடுறீங்களா...இங்க ஒரு பொம்பளை தானே இருக்கா?...இதோ என் மனைவிக்குதான்...கொஞ்சம் சீக்கிரம் பாருங்கள் ப்ளீஸ்"

"நான் நீ படுகிற டென்ஷனைப் பார்த்து உனக்குத் தான் பிரசவமோன்னு நினைச்சேன்...ரொம்ப கவலைப் படுகிறாயாமே..புதுப் பொண்டாட்டியா?"

நாசமாப் போடி...நீயும் உன் கடி ஜோக்கும்.."நீங்க இந்த மாதிரி கடி ஜோக்கடிக்காமல் என் மனைவியைப் பார்த்தால் கொஞ்சம் சொஸ்தமாயிருக்கும்"

"ஓகே ஓகே டென்ஷனாகத மேன்...நீ அவளை ரொம்ப பயமுறுத்திகிறாய்...இதே லட்சணத்துல நீ இவள பிரசவ அறையிலும் வந்து டென்ஷன் படுதினாயானால்...சுகப் பிரசவம் ஆன மாதிரி தான்...ஜாக்கிரதை"

நான் அதற்கப்புறம் கொஞ்சம் அடக்கிக் கொண்டேன்.

வீல் சேரில் கூட்டிப் போய் ஒர் அறையில் படுக்க வைத்து ரெண்டு மூனு செக் செய்தார்கள். அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டே வெளியே போய்விட்டார்கள்.

"என்னங்க எதாவது காம்ப்ளிகேஷனா?..."

"அதெல்லாம் ஒன்றுமில்லை...நீங்க அவளுடன் நில்லுங்கள் இன்னொரு நர்ஸ் வந்து பார்ப்பார்"

"என்னம்மோ திடீர்ன்னு கொஞ்சம் வலி குறைஞ்ச மாதிரி இருக்கு"

"வாய மூடிக்கிட்டு இருடி ஏற்கனவே லட்சனமா பார்க்கிறா ..அவ காதுல விழுந்திடப் போகுது..அப்புறம் வீட்டுக்குப் போயிட்டு அப்புறமா வான்னு சொல்லிடுவா..."

இன்னொரு குண்டு நர்ஸ் வந்து ஒரு ஊசி போட்டார். பக்கத்திலிருந்த ஃபைலை எடுத்துப் பார்த்துவிட்டு " நீ வலிதெரியாமல் இருக்க ஊசி கேட்கவில்லையா?" என்று கேட்டார்.

நாங்கள் முழித்ததுலேர்ந்தே இல்லை என்று புரிந்து கொண்டு.."ரொம்ப வலிச்சா இந்த டியூப்பை வாயில் வைத்து உறிஞ்சிக்கொள்..." என்று சொன்னார்.

"பெயின் கில்லரா?.."

"இல்ல பெத்தடின்...வலி தெரியாமல் இருக்கும்"

"எனக்கு வேண்டாம்பா.."

நேரமாக நேரமாக வலியெடுக்க ஆரம்பித்தது. கட்டில் கம்பியைப் பிடித்துக்கொண்டு முக்கினாள், முனகினாள்.

"ரொம்ப முடியலைடா...." என்று என் கையப் பிடித்துக்கொண்ட போது எனக்கு மனதைப் பிசைந்தது. சும்மாவே லேசாக அடிபட்டாலே பதறும் அவள் எப்படி பிரசவ வலி பொறுக்கப் போகிறாள் என்று பயமாக இருந்தது.

"இந்தா இத வாயில வெச்சு உறிஞ்சு...வலி தெரியாமல் இருக்கும்..."

வலி அவளை அனிச்சையாக பெதடின் குழாயை வாயில் பொறுத்தி உறிஞ்ச வைத்தது.

என் கைகளை இறுக்கிக் கொண்டாள்...படுக்கை லேசாக நனைந்த மாதிரி இருந்தது. ஓடிப் போய் நர்ஸை கூப்பிட்டேன்.

"பனிக்குடம் உடைந்துவிட்டதா?" ஓடி வந்து பார்த்தார்கள்.

"இல்லை..இன்னுமில்லை...இப்பொழுது தான் நல்ல வலி எடுத்து பனிக்குடம் உடைய ஆரம்பித்திருக்கிறது. வலியை அடக்கிக் கொள்ளாதே...முக்குவேண்டும் போல் இருந்தால் பயப்படாமல் முக்கு.."

ரத்த அழுத்தம் சோதனை செய்தார்கள். அவள் கண்கள் சொருகியிருந்தன. "இதோ பார் இனிமேல் நீ சோர்ந்து போகக் கூடாது...அந்தக் குழாயை இனிமேல் உறிஞ்சாதே...நன்றாக முக்கு...புஷ்...புஷ்..."

"இல்லை முடியலை...காலில் நரம்பு இழுத்துக் கொள்கிறது..என்னால முடியலைடா..."

காலை தடவிக் கொடுத்தேன்..."கவலப்படாதமா நீ முக்கு ...ஒன்னும் ஆகாது" நாலு பிரசவம் பார்த்தவன் மாதிரி உதடு சொன்னாலும் பப்ளிக் எக்ஸாம் எழுதப் போகும் பையன் மாதிரி அடிவயிற்றில் பயம் பந்தாக சுருண்டு கொண்டிருந்தது. தொளக் என்ற சப்தத்துடன் ரத்தமும் நீருமாய் திரவங்கள் பீறிட பனிக்குடம் உடைந்து.

"கமான்...பனிக்குடம் உடைந்து நீரெல்லம் வெளியேறிவிட்டது இனிமேல் காத்திருக்கக் கூடாது...நன்றாக முக்கு...சீக்கிரம் பிரசவாகிவிடும்..."

"வலியை பொறுத்துக்கிட்டு நல்லா முக்குடா...சீக்கிரம் குழந்தை பிறந்துடும்...ப்ளீஸ் கொஞ்சம் பொறுத்துகோடா..."

துணியை தண்ணீரில் நனைத்து அவள் முகத்தை அவ்வப்போது துடைத்துக் கொண்டிருந்தேன். படுக்கவுமில்லை உட்காரவுமில்லை என்ற பொசிஷனில் அடுத்த கால் மணி நேரம் அவள் படுகிற பட்டை பார்த்த போது எனக்கே கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.

"இன்னும் கொஞ்சம் டா"

"அம்ம்...ம்ம்ம்..ம்மா" என்று அவள் முயற்சியில் குழந்தை தலை தெரிந்தது.

"இன்னும் நல்லா முக்கும்மா..இந்த நிலையில் குழந்தை இருக்கக்கூடாது...தலை வெளியே வர வேண்டும்...இல்லையென்றால் குழந்தைக்கு மூச்சு முட்டும்...ம்ம்..நல்ல புஷ்..புஷ் புஷ்..." நர்ஸின் பதட்டம் எல்லோருக்க்கும் தொற்றிக் கொண்டது.

தனக்கு வலித்தாலும் குழந்தைக்கு மூச்சு முட்டக்கூடாது என்று அவள் கவலை கண்ணில் தெரிந்தது. அந்த ஐந்து நிமிட போராட்டம் வாழ்வில் மறக்க முடியாதது. ரத்தமும் சதையுமாய் குழந்தை வெளியே வந்த போது அவள் கண்ணில் தெரிந்த நிம்மதி விவரிக்கமுடியாதது. வாழ்நாளில் பார்த்திராத ரத்தம் வெளியேறி படுக்கை ரத்த மயமாக இருநதது.. குழந்தை வெளியே வந்த பிறகும் அவள் வயிற்றை அழுத்தி கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். அவள் வயிற்றில் இருந்து எடுத்த கழிவுகளைப் பார்க்க மயக்கமே வந்தது. வெளியே வந்த குழந்தை அழுவதற்காக லேசாக அடித்த போது நெஞ்சம் பதறியது. குழதையை காய்கறி கழுவது போல் கழுவி செக்கப்புகள் செய்து பஞ்சுக் குவியலாய் கொடுத்தார்கள். குழந்தையின் பிஞ்சு விரல்களைத் தொட்ட போது அடைந்த உணர்சிக்கு வார்தகளில்லை. குழந்தையை மெதுவாக தூக்கி அவளிடம் காட்ட திரும்பியது போது அவள் கிறக்கத்திலிருந்தாள்.

"பாருடா குழந்தைய பாரு.."

"ம்ம்..." என்று முனகியபடியே உதட்டில் வலியுடன் கூடிய புன்னகையுடன் தொட்டு முத்தமிட்டுக் கொண்டாள். விழியின் ஓரத்தில் இன்னும் கண்ணீர் கசிந்து கொண்டிருநதது. அவள் கண்கள் வலி மயக்கத்தில் மீண்டும் சொருகிக் கொண்டன.

தாய்மையைப் பற்றி எவ்வளவோ கேட்டிருந்தாலும் அதற்க்கு ஈடு இணை இல்லை என்று அன்று தான் உரைத்தது. தாய்மைக்கு ஈடாக தந்தைமை என்ற ஒரு வார்த்தை மட்டுமல்ல எதுவுமே ஈடாகாது என்று தோன்றியது. தொப்புள்கொடி உறவு என்றால் என்ன என்பதை உணர பிரசவத்தில் கூட இருந்தால் போதும்.

பிறப்பை பதிவு செய்ய விபரங்கள் கேட்க இன்னொரு நர்ஸ் வந்தாள்.

"பெயர் முடிவு செய்தாகிவிட்டதா?"

"....."

"இனிஷியல் சொல்லுங்க"

இனிஷியலாக என் பெயரைப் போட்டுக் கொண்ட போது குற்றவுணர்ச்சி வாட்டியது. வாட்டிக் கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் இனிஷியலை மாற்ற வேண்டும்.

விருந்தோம்பல்

மை டியர் டார்லிங் என்று மல்லிகா அன்பாய் கூப்பிடும் சனிக்கிழமை அதிகாலை ஒன்பது மணி (மிட்நைட்) தூக்கத்தில் கண்ணை மூடி தேமேன்னு படுத்துக் கிடவாமல், “ஐயையோ...இன்னிக்கு வீட்டைக் க்ளீன் பண்ணனுமே” என்று ஜெர்க் ஆகி எழுந்தால் அன்றைக்கு வீட்டிற்கு யாரோ விருந்துக்கு வருகிறார்கள் என்று அர்த்தம். “வைச்சது வைச்ச இடத்தில் கலையாம நீட்டா இருக்கிறதுக்கு இதென்ன மியூசியமா? குடியிருக்கிற வீடு அப்பிடி இப்பிடி தான் இருக்கும்” என்ற பார்த்திபன் கனவு டயலாகை மேற்கோள் காட்டி ஹால் கதவை திறந்தால் வீடு மியூசியத்துக்கு வெகுதூரத்தில் சாக்கிசான் சண்டைக் காட்சி நடந்த லொக்கேஷன் மாதிரி கந்த கோளமாய் இருக்கும்.

“அலாவுதீனும் அற்புத விளக்கும்” கதையில் வரும் “ஆலம்பனா” பூதத்தை வீட்டு வைலைக்கு வைக்கலாமா என்று நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, தங்கமணி ஒரு டீ ஒன்றை போட்டு குடுத்து  விட்டு “தம்பி டீயை குடிச்சிட்டு தீயா வேலை செய்யணும். கம்பேனி உன்கிட்டேர்ந்து நிறைய எதிர்பார்க்குது”ன்னு ‘ஆலம்பனா’ அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை என் கையில் குடுத்துவிடுவார். முதல்வன் அர்ஜூன் மாதிரி வீட்டோடு எல்லோருக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் ரெடியாக வைத்திருப்பார். கிச்சனும் கிச்சன் சார்ந்த இடங்களும் தங்கமணி அண்ட் கோவிற்கும், டாய்லெட்டும் டாய்லெட் சார்ந்த இடங்களும் எனக்கும் என்று நியாய பாகப்பிரிவினை எல்லாம் முதலிலேயே அரங்கேறிவிடும்.

சினிமாவில்/விளம்பரங்களில் இளம் கதாநாயகிகள் அழகாக குளித்துவிட்டு தலைமுடியை முன்னால் லேசாக கலைத்து விட்டுக் கொண்டு இன்னும் கொஞ்சம் அழகாய் காட்டன் புடவையை இடுப்பில் சொருகிக் கொண்டு வீட்டை சுத்தம் செய்வார்கள். வீடும் சமத்தாய் பாஸ்ட் ஃபார்வேட் மோடில் பதினாறு வினாடிகளில் பள பளவென்று ஆகிவிடும். நாயகியும் சுடச் சுட காப்பி போட்டு குடித்துவிட்டு ஜன்னல் கர்டன்களை விலக்கி விடுவார். ஆனால் இந்த நிஜம் இருக்கிறதே நிஜம், ஸ்ப்ப்பா நொங்கெடுத்து நோக வைத்துவிடும். இருக்க வேண்டியது இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது இல்லாதது இருக்கவே இருக்காது.கோப்பில் எடுத்து வைக்காத கடுதாசிகள் 5E பஸ் மாதிரி லெட்டர் ஹோல்டரில் புட்ஃபோர்டில் தொங்கிக் கொண்டிருக்கும்.

“இதான் அன்னன்னிக்கு வந்த லெட்டர அப்பவே எடுத்து வைச்சிருந்தா இப்போ இப்படி முழிக்க வேண்டாம். சொன்னதக் கேட்டா தானே எல்லாம் நான் பார்த்துக்குறேன் நான் பார்த்துக்கிறேன்னு. யாரு வேண்டாம்னா..நல்லா நிறுத்தி நிதானமா பாருங்க”  - தங்கமணி தீவிரமான ராஜ்கிரண் ரசிகர். சமயம் பார்த்து ஆர்பாட்டம் இல்லாமல் அடிக்கிற அடியில் ‘களுக்’ன்னு எலும்பு முறியும் சத்தம் மட்டும் தான் வரும் மிச்சமெல்லாம் இண்டர்னல் ப்ளீடிங் தான்.

“அப்பா நீங்க ரொம்ப நாளா தேடின டார்ச் லைட் இங்க வாஷிங் மெஷின் பின்னாடி விழுந்து இருக்கு” என்று மகள் வேறு சமய சந்தர்ப்பம்  தெரியாமல் எடுத்துக் குடுப்பார். “தெரியும்டா செல்லம் ஆத்திரம் அவசரம்னா எடுக்கறதுக்கு வசதியா இருக்குமேன்னு நான் தான் வாஷிங் மிஷின் பின்னாடி பத்திரமா வைச்சிருக்கேன்”- ஒரு மனுஷன் ஒரே நேரத்துல எவ்வளவு பேரைத் தான் சமாளிப்பான்?

“நீ வாங்கி வைச்சிருக்கிற அந்த ப்ளூ பிரஷ் அவ்வளவு போறலை. என்ன பிரஷ் வாங்கியிருக்க..அத வைச்சு எவ்வளவு தேய்ச்சாலும் பாத்ரூம க்ளீனே ஆக மாட்டேங்குது. உன்னை கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான்னு நினைக்கிறேன்”

“என்னது ப்ளூவா...ஓ மை காட் அது பெடிக்க்யூர் பிரஷ்...அது காலுக்கு வாங்கி வைச்சது..அத வைச்சா பாத்ரூம க்ளின் செஞ்சீங்க”ன்னு தங்கமணி பதறிக் கொண்டு வரும் போது “அதானே பார்த்தேன் இதப் பார்த்தா பாத்ரூம் பிரஷ் மாதிரி இல்லையேன்னு எனக்கு அப்பவே டவுட்டு. நல்ல வேளை யூஸ் பண்றதுக்கு முன்னாடியே உன் கிட்ட கேட்டேன்..நான் காட் ப்ராமிஸா இத வைச்சு க்ளீன் செய்யலமா” உபயோகித்த சுவடே தெரியாமல் ப்ரஷ் இருந்த இடத்திற்கு போய்விடும்.

எங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வருவதென்றால் சில பல கண்டிஷன்கள் உண்டு. விருந்தினர் அதை உணராமல் செயல்படுத்த கம்பெனி எல்லாவிதமான முயற்சிகளும் எடுக்கும் . வருவதற்கு ஒரு வாரம் முன்னமே எங்களுக்கு தகவல் சொல்லி விட வேண்டும். “கண்டிப்பா நம்ம வீட்டுக்கு நீங்க வரணும். ஆனா முந்தின வாரமே சொல்லிட்டு வாங்க, ஏன்னா முக்கால்வாசி வாரக் கடைசி நாங்க வீட்டுலயே இருக்க மாட்டோம்.எங்கேயாவது போய் விடுவோம். நீங்க வந்து அப்புறம் நாங்க இல்லாம கதவ தட்டிக்கிட்டு நின்னீங்கன்னா எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும் பாருங்க அதான்”

நடுவில் ஒரு வாரக் கடைசி இருப்பது நலம் பயக்கும். “ஓ..நாளைக்கா...அடடா ரொம்ப சாரிங்க அனுஷ்கா வூட்டுல அவல் சாப்பிட வரச் சொல்லி ஒரே அடம், நீங்க அதுகடுத்த வாரம் கண்டிப்பா வரனும் ப்ளீஸ், இல்லைன்னா நாங்க வேணா அனுஷ்கா வூட்டு அப்பாயிண்மெண்ட கேன்சல் பண்ணிடறோம்”ன்னு ஒரு பிட்ட போட்டால் “சேச்சே...அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை நாங்க அடுத்த வாரம் வரோம், நீங்க அனுஷ்கா வூட்டுல அவல் சாப்பிட்டுவிட்ட வாங்க”ன்னு நீங்களே கண்டிஷனுக்கு டிக் போட்டு விடுவீர்கள்.

சம்பவ நாள் அன்றைக்கு காலையில் பத்து மணி வாக்கில் சுமார் எத்தனை மணிக்கு வந்து சேர்வீர்கள் என்று ஸ்கெட்சு போடுவோம். “சும்மா குட்மார்னிங் சொல்ல தான் ஃபோன் பண்ணினேன்..குட்டீஸ்லாம் எழுந்தாச்சா..இன்னும் இல்லையா, நோ ப்ராபளம் சின்னப் ‘பூ’ங்க அது ... எழுப்பிடாதீங்க. மெதுவா எந்திரிக்கட்டும் நம்ம வீடு தானே எப்போ வேணா வரலாம் ஒன்னும் பிரச்சனையே இல்லை”

“அதிதி தேவோ பவ” என்ற கோட்பாடின் படி உங்களை முதலமைச்சர் ரேஞ்சுக்கு மரியாதையாய் நடத்துவோம். “நீங்க அங்க உங்க வீட்டுலேர்ந்து கிளம்பும் போது கால் பண்ணுங்க ப்ளீஸ். ஏன்னா இங்க வீட்டுக்கு முன்னாடி பார்க்கிங் பிஸியாய் இருக்கும் நாங்க இடத்த ரிசர்வ் செஞ்சு வைச்சிடுவோம் அதுக்குத் தான் பாருங்க. அவங்க கிளம்பியாச்சு, கவலபடாத இன்னும் 30 நிமிஷம் இருக்கு அதுக்குள்ள  எல்லாத்தையும் க்ளியர் பண்ணிடறேன்”

நீங்கள் வந்து கொண்டிருக்கும் போது போதும் இன்னொரு ஃபாலோஅப். “எங்க இருக்கீங்க..இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவீங்களா..இல்ல இங்க ஏ30ல ஒரே ட்ராபிக்குன்னு பக்கத்து வீட்டு வெள்ளக்கார மாமா சொன்னார் அதான் உங்கள உஷார் படுத்தலாமேன்னு. என்னது ட்ராபிக்கே இல்லையா ஓ அப்ப அவர் சொன்னது போன வாரமா இருக்கும்”

“ஒரு துணியை ஒருவர் மடித்து வைக்க இரண்டு நிமிடம்,அப்போ இருபது துணியை இரண்டு பேர் மடித்து வைக்க இன்ன நேரம் ஆகும், கண்டின்ஜென்சிக்கு அதை விட ஒன்றரை மடங்கு நேரம், சோ என்னோட துணிமணியெல்லாம் நானே மடிச்சு வைச்சிக்கிறேன், யாரும் தொட வேண்டாம், நாளை காலை பத்துலேர்ந்து பத்தேகாலுக்குள்ள எல்லாத்தையும் அயர்ன் செய்து மடிச்சு வைச்சிடுவேன்” - ஆபிஸில் கற்றுவந்த ப்ராஜெக்ட் ப்ளானிங்க கோட்பாடுகள் எல்லாம் ஏனோ எனக்கு மட்டும் வீட்டில் வொர்க் அவுட்டே ஆகாது. வீட்டில் எல்லார் துணிமணிகளும் ஒழுங்காய் மடித்து வைக்கப்பட்டிருக்க, என்னுடைய சட்டைகளுக்கு கண்டின்ஜென்சி என்னவோ போர்வையை விரித்து எல்லா துணியையும் அதில் போட்டு இருமுடி மாதிரி கட்டி பீரோவில் அடைத்து பூட்டி வைப்பதாய் தான் இருக்கும்.

"Expect the unexpected" என்று எந்த நாதாரி திருவாய் மலர்ந்தாரோ தெரியாது ஆனால் கரெக்ட்டாய் நடக்கும். தங்கமணி வாங்கி வர சொன்ன சமையல் லிஸ்டில் ஏதாவது முக்கியமாய் விட்டுப் போயிருக்கும்.  “என்னம்மா எந்த காலத்துல இருக்க, முட்டை இல்லாம ஆம்லெட்டே செய்யறாங்க,  புளி இல்லாம புளியோதரை செய்ய முடியாதா? ” போன்ற அதிகப்பிரச்ங்கித்தனத்துக்கெல்லாம் அது வேளையில்லை. “ஓகோ...வருவாங்க.. நீங்க தான் சர்கரைக் கட்டியாய் பேசிப் பேசியே வாயால பாயாசம் விடுவீங்களே, வுடுங்க” என்று ஆபத்தில் முடிந்துவிடும்.

என்னடா சோத்த போட்டுட்டு முகம் அனிச்ச மலர் மாதிரி பூத்திருக்கா வாடியிருக்கான்னு விருந்தோம்பல் விதிகளை கடை பிடிக்காம இப்படி கண்ட மேனிக்கு கண்டிஷன் போடுகிறார்களே என்று நினையாதீர்கள். டென்ஷன் எல்லாம் நீங்க வீட்டுக்கு வர்ற வரைக்கும் தாங்க. அதுக்கப்புறம் கலகல வென்று ஆகிவிடும். நாம் பேசிக் கொண்டிருப்போம், கேம்ஸ் விளையாடுவோம்,சினிமா பார்ப்போம், அப்புறம் முக்கியமாய் தங்கமணி செய்து வைத்திருக்கும் ருசியான சாப்பாடு சாப்பிடுவோம். நீங்களும் “எப்படிங்க வீட்ட இவ்வளவு சுத்தமா அழகா வைச்சிருக்கீங்க”ன்னு கேட்பீங்க, அப்புறம்  “இந்த வெங்காய சாம்பார் ரொம்ப சூப்பர்ங்க கொஞ்சம் ரெசிபி சொல்லுங்களேன்”ன்னு கேட்பீங்க. “அட அது ரொம்ப ஈசிங்க சும்மா அசால்டா செய்யலாம்”ன்னு வாங்கி வந்த மளிகை சாமான் லிஸ்டை வைத்தே நான் ஒரு ரெசிப்பி சொல்லுவேன், அப்போ தங்கமணி கண்ணால் லேசர் விடு தூது ஒன்னு விடுவாங்க, விடுங்க பாஸூ வீரனோட வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜம்  பாஸு :)
கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய். இதற்கு கழுதை சொன்னது

"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்
"நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு நாய் கூறியது,

"சார், 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன் கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு. கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்துவிடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.
அன்று முதல்

மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.
கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதைபோல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.
குழந்தைகள் வளர்ந்த பிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.
வயதாகி, retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்.....

இப்ப தெரியாதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு? ஹாஹாஹா....

கருவாச்சி காவியம் - கவிபேரரசு வைரமுத்து

எழுத்தாளர் பற்றிய குறிப்பு:
 வைரமுத்து 
             வைரமுத்து  புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்
           அவரின் ரசிகர்களால் நடத்தப்படும் இணையத்தை பார்க்க சொடுக்கவும்.http://www.vairamuthu.net/vairamuthu/index.php/vairamuthu-mugappu.html


    "புனையப்படாத நாவல்தான் வாழ்க்கை,புனையப்பட்ட வாழ்க்கை தான் நாவல்,கெட்டியான இரத்தமும், பெண் வேர்வையும், பிசுபிசுக்கும் வாழ்க்கை இது" நூலின் முகத்தில் ஆசிரியன் சொன்ன வரிகள் இது . 






              தமிழகத்தின் தெற்குப் பகுதியில் வாழும் கடைகோடி சனங்களின் வாழ்க்கை ,கலாச்சார, பண்பாட்டு ஆவணம் இது. தமிழகத்தின் கலாச்சாரமாய் வெளியுலகுக்கு இதுவரை சொல்லப்பட்டு வந்தவை, மேல்தட்டு மக்களின் அதிலும் குறிப்பாய் பார்ப்பன ஸாதியரி௯ந் பழக்க வழக்கங்கள் தான். தமிழக நடன வடிவமாய் பரதம் முன்னிலைப்படுத்தப்படும் வேளையில் கூத்து, தேவராட்டம், கோடாங்கி ஆட்டம், கரகாட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரை, காவடி, மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற தமிழ் நடன வடிவங்கள் புறக்கணிக்கப் பட்ட நிலையில் இருப்பது போல் தான் தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களின் கலாச்சாரமும் பண்பாட்டுக் கூறுகளும் பொது வெளியில் புறக்கணிக்கப்பட்டு கொண்டு இருக்கும் சூழலில் இது போன்ற ஆவணப்படுத்துதல் மிக முக்கியமானது. 
 கருவாச்சி ம.செ. வின் ஓவியம் 
              


                     எந்தவொரு இனக்குழுவிலும் காணப்படும் புவியியல் ரீதியான கலாச்சார, பண்பாட்டு, மொழி சார்ந்த வேறுபாடுகளை அழித்தொழித்து ஒருமைபடுத்துவதையே அனைத்து அரசுகளும், அதிகார விரும்புகின்றன.அந்த வகையில் இந்த புத்தகம் தென் தமிழகத்தின் 
 விவசாய கிராமமான சொக்கத்தேவன் பட்டியை ஆவணப்படுத்துகிறார்,  அந்த செம்புழுதியில்  பிறந்து இன்று சென்னையில் வாழும் கவிஞர். 




                   சொக்கத்தேவன்பட்டி, கள்ளிக்காட்டில் வாழ்ந்த கருவாச்சியின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் அழகாய் படம் பிடித்து காட்டுகிறார். விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் மக்களின் நிலையற்ற சூழலையும் அதிலும் தளராத நம்பிக்கையின் கீற்றுகளையும் காட்சிப்படுத்துகிறார். 


            பெண்ணை காவிய தலைவியாக்கி காவியம் படைப்பது தமிழுக்கு புதிதல்ல, ஆனால் காலத்து மேட்டிலும், கள்ளிக் காட்டிலும், கல்லை கரைத்து கஞ்சி குடிக்கும் அடித்தட்டு கருவாச்சியை காவிய தலைவியாக்கி இருப்பது தான் புதுமை. அவள் கரங்கள் மென் கரங்கள் அல்ல, மண்வெட்டி பிடித்து காப்பேறிய கரங்கள், அவள் வேன்மேகத்தை நிகர்த்த நிறத்தவள் இல்லை. வெம்மையில் உழைத்து மை கரி என கருப்பேரிய நிறத்தவள், இதுவரை தமிழ் இலக்கியங்கள் பாடாத புதுமை பெண் இவள். 




                           கருவாச்சியின் பாத்திர படைப்பு இன்றைய பெண்ணியம் பேசுபவர்களுக்கு பிற்போக்காய் தெரியலாம். அது அந்த காலக்கட்டத்தில் (சுதந்திரத்திற்கு முன்) வாழ்ந்த பெண்ணின் பாத்திரப் பிரதிபலிப்பு என்பதை மறந்து விடக் கூடாது.  
ம. செ வின் ஓவியம் 



     புத்தகத்தை படிக்க சொடுக்கவும் :http://www.scribd.com/doc/1026956/-

நான் படித்த புத்தகங்கள்

எழுத்தாளர் பற்றிய குறிப்பு:


 சேத்தன் பகத் 

                 சேத்தன் பகத் புது தில்லியில் பிறந்தவர், அவர் புது தில்லியின் தவுலா கான் இராணுவப் பொதுப் பள்ளியில் படித்தார். தன்னுடைய எந்திரப் பொறியியல் படிப்பை, இந்திய தொழில்நுட்ப கல்விநிறுவனத்திலும்  (IIT)  அதன் பின்னர் மேலாண்மை கல்வியை  இந்திய மேலாண்மைக் கல்விநிறுவனம், அகமதாபாத்தில் படித்தவர. பின்  ஹாங்காங்கில் டியூட்சே வங்கியில் பதினோரு ஆண்டுகள் பணிபுரிந்தார், 2008 ஆம் ஆண்டில் மும்பைக்கு வந்துவிட்டார். பின்னர் அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகி தன் எழுத்துப் பணியை தொடங்கினார்,  இதுவரை 5 நாவல்களை எழுதி உள்ளார், ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் இளைய தலைமுறையிடையே பிரபலமானவராகவும், அதிக அளவில் வாங்கப்படும் புத்தக எழுத்தாளராகவும் உள்ளார். 




                   இவர் ஒன் நைட் அட் கால் சென்டர், டூ ஸ்டேட்ஸ் , த்ரீ மிஸ்டேக்ஸ் ஆப் மை லைப் , ஃபைவ் பாய்ண்ட் சம்ஒன், ரிவல்யுஷன் 2020 என்ற ஐந்து புதினங்களை எழுதி உள்ளார். இந்த புத்தகங்கள் திரைப்படங்களாகவும் எடுக்கப் பட்டு பெருவெற்றிப் பெற்றுள்ளன.  மிகப் பெரிய இந்தி செய்தித்தாளான தைனிக் பாஸ்கர் மற்றும் ஆங்கில தினசரியான தி இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் தலையங்கத்துக்கு எதிர்ப்புறத்தில் ஒரு பத்தி பகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. "புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களின் முக்கிய நோக்கம் பொழுதுபோக்குவதற்கு ஆனால் நான் எழுதும் பத்திகள் தேசம் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பது பற்றிய என் கருத்தை வெளிப்படுத்த அனுமதிக்கின்றன" என்று அவர் கூறுகிறார். ஊக்கப்படுத்தும் பேச்சுகளை வழங்குவதற்காக இந்தியாவெங்கும் இருக்கும் கல்வி நிலையங்களுக்கும் அவர் சென்று வருகிறார். 

     சேத்தன் பகத்தின் தளத்தை படிக்க சொடுக்கவும்:http://www.chetanbhagat.com/about/



             இந்தியர்களின் புனித தலைநகரான வாரணாசியில் கங்கை நதி கரை தான் கதைக்களம். ஒரு அழகான முக்கோண காதல் கதை, கோபால், ஆர்த்தி, ராகவ் மூவர்கிடையிலான காதல், மோதல், ஆசை, நிராசைகள் தான் கதை. வாரணாசி கரையில் கங்கையின் ஓட்டத்தினூடே கதையும் நகர்கிறது, 
 வாரணாசி


பாத்திரப்படைப்பிலும், கதைக்கள விவரனையிலும் ஆசிரியரின் உழைப்பு புத்தகத்தை கீழே வைக்காமல் படித்து முடிக்க வைக்கிறது. 
           
                      ஒரு காதல் கதையின் ஊடே இந்திய சமூகத்தின் பிரச்சனைகளையும், அதிகார மட்டத்தில் நடக்கும் ஊழல்களையும், மாற்றத்தை விரும்பும் இளைஞகர்கள் என இன்றைய இந்தியாவின் சூழலை பிரதிபலிக்கிறது.  IIT , NIT , நுழைவு தேர்வுகள் பற்றிய காட்சிகள் மாற்றத்தை குறித்து நம்மையும் சிந்திக்க வைக்கிறது. 

KARNAN

பரம்பரை எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால், சிவாஜியை சிறுவயதிலிருந்தே பிடிக்காது. ஆனால் வயதான காலத்தில் என் அப்பாவே கூட சிவாஜியை கண்மூடித்தனமாக ரசிக்க ஆரம்பித்துவிட்டார். பத்து வருடங்களுக்கு முன்பு எப்போது பார்த்தாலும் என் வீட்டில் திருவிளையாடலும், சரஸ்வதி சபதமும், பாவமன்னிப்பும் இடைவிடாது ஓடிக்கொண்டேயிருக்கும்.

“ராயல் வாக்” சிவாஜிக்கு மட்டும்தான் என்பார் அப்பா. தெய்வமகன், திருவிளையாடல் படங்களில் சிவாஜியின் ‘டபுக்கு டபான்’ மியூசிக்கோடு வரும் நடையினை சுட்டிக்காட்டி கிண்டல் செய்வேன்.

சிவாஜி மறைந்த அன்று எனக்கு வயதாகிவிட்டிருக்கும் போல. தமிழருக்கு கிடைக்காமல் கிடைத்த மாணிக்கம் அவர் என்பதை திடீரென உணர்ந்தேன். தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கு சிவாஜியின் படங்களை திரும்பத் திரும்ப பார்த்தேன். பாசமலரின் இறுதிக்காட்சியில் அவரது நடிப்பு (பிணமாக) உலகத்தரம் வாய்ந்தது என்று உணர முடிந்தது. அண்ணா ஒருமுறை சொல்லியிருந்தார். “மார்லன் பிராண்டோவை விட சிறந்த நடிகன் நமது சிவாஜி”. நூற்றுக்கு லட்சம் சதம் உண்மை. இன்று கமலுக்கு, விக்ரமுக்கு, அமிதாப்புக்கு, ஷாருக்குக்கு, சல்மானுக்கு என்று சமகாலத்தின் சிறந்த நடிகர்களுக்கெல்லாம் ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்தை சிறப்பிக்க போதுமான முன்னுதாரணங்கள் இருக்கிறது. ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் சிவாஜிக்கு அத்தகைய வசதியில்லை. அவர் சிறப்பாக நடித்த படங்கள் எல்லாம் முழுக்க முழுக்க அவரது தனித்துவ படைப்பாற்றலால் உருவானவை.

சிவாஜியின் நடிப்பு மிகைத்தன்மை வாய்ந்தது என்று முன்பொரு காலத்தில் மூச்சுப்பிடிக்க வாதிட்டிருக்கிறேன். மைக் இல்லாத அந்தக் காலத்து நாடகங்களிலிருந்து வந்தவர்களின் இயல்பு அது என்பதை இப்போது புரிந்துக்கொள்ள முடிகிறது. சத்தமாகதான் பேசுவார்கள். உடல்மொழி அசாதாரமாணதாக இருக்கும். அதே சிவாஜி பிற்பாடு தேவர் மகனில் கமலைவிட யதார்த்தமாக நடித்து அசத்தியிருக்கிறார்.

முன்னுரையே கொஞ்சம் நீளமாகிவிட்டது. சிவாஜியைப் பற்றி எழுதுவதென்றால் கொஞ்சம் மிகையாக இப்படி நீட்டி முழக்குவது இயல்பாக வந்துவிடுகிறது.



கடந்த வார இறுதியில் மூன்று தீவிர ‘வாத்யார்’ ரசிகர்கள் கர்ணன் பார்க்கப் போனோம். வாசலில் பேனர், தோரணம், போஸ்டர் என்று இளைய-அல்டிமேட்-புரட்சி-சின்ன-லொட்டு-லொசுக்குகளுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் சிவாஜி ரசிகர்கள் களமிறங்கியிருந்தார்கள். 1964ல் வெளியாகி, கிட்டத்தட்ட தமிழகமே நான்கைந்து முறை பார்த்துவிட்ட ஒரு படத்துக்கு 2012ல் இப்படிப்பட்ட வரவேற்பு என்பது ஆச்சரியகரமானதுதான். முழுக்க முழுக்க ஃபேமிலி ஆடியன்ஸ். தொண்ணூறு சதவிகிதம் அரங்கு நிறைந்தது. டிக்கெட் கிழிக்கும் இடத்தில் படம் பார்க்க வந்தவரின் செல்போன் ஒலித்தது. ரிங்டோன் : உள்ளத்தில் நல்ல உள்ளம்.

இப்போது படம் பார்த்த சில நண்பர்கள் டெக்னிக்கலாக ஒரு மண்ணையும் கழட்டவில்லை என்று அலுத்துக் கொண்டிருக்கிறார்கள். சாதா படத்தை சினிமாஸ்கோப்பாக மாற்றியிருக்கிறார்கள் என்பதே சாதனைதான். ஓடி ஓடி தேய்ந்துப்போன ஃபிலிமிலிருந்து இமேஜ் எடுத்து டிஜிட்டலில் கலர் பூஸ்ட் செய்திருக்கிறார்கள். சில காட்சிகள் அதே பழைய சொதப்பலோடு இருந்தாலும், பல காட்சிகளில் ஃப்ரெஷ்னெஸ் தெரிகிறது. பாடல் காட்சிகளில் கூடுதல் இசை, சைட் ஸ்பீக்கர்களில் கேட்கும் வண்ணம் சேர்த்திருக்கிறார்கள்.

ஏற்கனவே சிலமுறை பார்த்திருந்தாலும், ஒருமுறை கூட கர்ணனின் டைட்டிலை நான் பார்த்ததில்லை. டைட்டிலுக்கு முந்தைய ‘பிட்’ ஒன்றே போதும், கர்ணனின் தரத்தை பறைசாற்ற. உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபியான கர்ணனை, அவனது தாய் குந்திதேவி ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டு விடுகிறாள். தேரோட்டி ஒருவர் அக்குழந்தையை கண்டெடுத்து வாரிச்செல்ல, வழியில் ஒரு சாமியார் ஏது இக்குழந்தை என்று விசாரிக்கிறார். குழந்தையை அந்த சாமியாரிடம் தேரோட்டி கொடுக்க, குழந்தை சிரித்தபடியே தன் கையில் இருக்கும் ஒரு முத்துமாலையை சாமியாருக்கு ‘தானம்’ செய்கிறது. தியேட்டரில் விசில் சத்தம்.

மகாபாரதத்தின் ஒரு போர்ஷனை மட்டும் எடுத்துக்கொண்டு மிகத்திறமையாக திரைக்கதையாக்கம் செய்திருக்கிறார்கள். சக்தி கிருஷ்ணசாமியின் பஞ்ச் டயலாக்ஸ் மாஸ் சினிமாவின் உச்சம். ஹீரோவான கர்ணன் மட்டுமின்றி, வில்லன், ஹீரோயின், துண்டு துக்கடா பாத்திரங்கள், அட்மாஸ்பியருக்கு வந்து போகிறவர்கள் என்று ஆளாளுக்கு ‘பஞ்ச்’ ஆக பேசித்திரிய, படம் பார்க்கும் கிழவிகள் கூட விசிலடித்து, விசிலடித்தே வாய் வீங்கிப் போகிறார்கள். குறிப்பாக சாவித்ரியும், சிவாஜியும் விளையாடிக் கொண்டிருக்கும் (தாயக்கட்டைதான்) போது ஒரு எசகுபிசகான கட்டத்தில், சாவித்ரியின் கணவரான துரியாதன அசோகன் வந்துவிட.. இருவரும் திருட்டு முழி முழிக்க, நியாயமாக ஒரு கணவனுக்கு வரவேண்டிய கோபமோ, சந்தேகமோ இல்லாமல் இளிச்சவாய் கணவனாக “எடுக்கவா, கோர்க்கவா” என்று அசோகன் அடிக்கும் பஞ்ச் அதகளம்.

பொண்டாட்டியை சந்தேகப்படும் கேரக்டர்களிலேயே பெரும்பாலான தனது திரைவாழ்வை கழித்துவிட்ட முத்துராமன் வீரமான அர்ஜூனன் பாத்திரத்துக்கு எனும்போது கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது. As per மகாபாரதம், படத்தின் ஆரம்பக்கட்ட காட்சிகளில் இவர்களுக்கெல்லாம் வயது இருபது டூ இருபத்தி மூன்றாக இருக்க வேண்டும். தொப்பையும், கிப்பையுமாக இருக்கும் சிவாஜியை இருபதுகளின் ஆரம்ப வயதில் ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். அசோகனுக்கு புருவத்தை ஓவர் அழகாக திருத்தி விட்டிருக்கிறார்கள். மீசை மட்டும் இல்லையென்றால் ஐஸ்வர்யாராயை விட அழகாக இருந்திருப்பார்.

காட்சிகளின் தொடக்கமும், முடிவும் சக்தி நாடகக்குழுவின் ஓம்சக்தி நாடகம் மாதிரியே இருக்கிறது. ஸ்க்ரீனுக்குள் ஒவ்வொரு பாத்திரமாக வந்து நெஞ்சுருக பேசுகிறார்கள். பஞ்சப் பாண்டவப் பயல்கள் எருமைக்கடா சைஸுக்கு இருந்துக்கொண்டு ஆளாளுக்கு அம்மா, அம்மாவென்று கொஞ்சுவது சகிக்க இயலாதது. காட்சி முடிந்ததும் கடனேவென்று எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் ஒவ்வொருத்தராக கிளம்புகிறார்கள்.

எல்லாக் கொடூரங்களையும் ஒருவகையாக சகித்துக் கொள்ளலாம். கர்ணனின் ரொமான்ஸ்தான் உச்சக்கட்ட கோராமை. இளமையான அழகான தேவிகாவை தன்னுடைய வீரத்தையும், கம்பீரத்தையும் காட்டி மயக்குகிறார், மயங்குகிறார் நம் கர்ணன். திருமணம் ஆகும்வரை பிரிவுத்துயர் தாளாமல் இவர் ஏங்க.. எவ்வளவு அடித்தாலும் ரசிகர்கள் தாங்க.. ஒரே ரகளைதான்.

இடைவேளைக்குப் பிறகு அதிரடியாக ஒரு கோயிலின் கர்ப்பக் கிரகத்திலிருந்து நேரடியாக முகம் முழுக்க ப்ளூ கலர் பவுடர் பூசி கண்ணனாக என்.டி.ஆர். களமிறங்குகிறார். அவர் திருதராஷ்டிரனின் சபைக்கு வந்து எகனைமொகனையாய் விடாமல் பதினைந்து நிமிடங்களுக்கு டபுள் மீனிங்கில் பேசி தாலியறுக்கிறார். இதற்குப் பிறகுதான் சூடு பிடிக்கிறது படம். இரண்டாம் பாதியில் கர்ணன் அவ்வளவாக சீனில் தலை காட்டுவதில்லை. போர் யுக்திகள், கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமான Cat & Mouse விளையாட்டு, திக்கைத்தனமாக துரியோதனன் செய்யும் நயவஞ்சக செயல்களை, தனது கூர்மையான அறிவுத்திறனால் கண்ணன் கட்டுடைப்பது என்று ‘கில்லி’ லெவல் ஸ்பீடு.

ஆரம்பத்திலிருந்தே இந்திரனில் தொடங்கி துரியோதனன், சகுனி, துரோணர், பீஷ்மர், குந்திதேவி, கண்ணன் என்று கிட்டத்தட்ட படத்தின் எல்லாப் பாத்திரங்களுமே தன்னை ‘சூ’ அடிப்பதை புரிந்துகொள்ளாமலேயே, கேணைத்தனமாக ‘எல்லாம் நல்லதுக்கே’ என்று நினைத்து இறுதியில் உயிரை விடுகிறார் கர்ணன். “அய்யோ என் மகனே” என்று குந்திதேவி மார்பில் அடித்துக்கொண்டு, கர்ணனின் தலையை மடியில் வைத்துக் கொண்டு கதற.. மண்டையைப் போட்டது கர்ணனா அல்லது அர்ஜூனனாக என்று ப.பாண்டவர்களில் அர்ஜூனன் தவிர்த்து மீதி நாலு பேரும் குழம்ப.. இருக்கும் குழப்பம் பத்தாது என்று “என் மகனை கொன்றுவிட்டீர்களே” என்று தலைவிரிக் கோலமாய் தர்மத்தேவதை வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்க.. கர்ண்ணன் குந்தித் தேவியின் மகனா அல்லது தர்மத் தேவதையின் மகனா என்கிற சஸ்பென்ஸோடு படம் முடிகிறது.

ஓக்கே. சீரியஸாக இப்படத்தை அணுகுவதாக இருந்தால் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சில அரசியல் கண்ணிகள் காட்சியமைப்பிலும், வசனங்களிலும் புதைந்துள்ளதை கண்டுகொள்ளலாம்.

படத்தின் ஆரம்பத்தில் பிறப்பினை அடிப்படையாக வைத்து அர்ஜூனனுக்கு, கர்ணன் சமமாக முடியாது என்று ஆச்சார்யார்கள் வாதிடும்போது, கர்ணனை சிற்றரசனாக்கி ‘இட ஒதுக்கீடு’க்கு அன்றே பிள்ளையார் சுழி போடுகிறான் துரியோதனன். ஒவ்வொரு முறை இதே காரணத்துக்காக கர்ணன் மட்டம் தட்டப்படும் போதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது நம் கர்ணனின் குரல்.

கல்மனதையும் கரையவைக்கும் இறுதிக்காட்சியில் உலகில் தோன்றிய ஒவ்வொரு மாவீரனின் முடிவையும் கண்முன் கொண்டு வந்து காட்டுகிறார் இயக்குனர் பந்துலு. அதிலும் வீரமாகப் போரிடும் குழந்தைப் போராளியான கர்ணனின் மகனை அயோக்கியத்தனமாக கண்ணன்–அர்ஜூனன் கூட்டணி இரக்கமின்றி சாகடிப்பதும், போர் யோக்கியதையை மீறி நேருக்கு நேராக மோத திராணியின்றி தேர்க்காலை தூக்கி நிறுத்த தலைப்பட்ட நேரத்தில் கர்ணனின் நெஞ்சிலே அம்புகளை இதே கோழைக்கூட்டணி எய்வதும் சமீபக்கால வரலாற்றினை நெஞ்சிலே நிழலாடச் செய்கிறது.

இராமாயணத்திலே ராமன், மகாபாரதத்திலே கண்ணன் என்று கோழைப்பயல்களின் பேடித்தனம் காலம் காலமாக ஹீரோயிஸமாக கட்டமைக்கப்படும் இத்தேசத்தில் இராவணன், கர்ணன் மாதிரி நேர்மையான புரட்சி வீரர்களின் தனித்துவப் புகழ் மெச்சி சொல்லப்படுவதை வரவேற்றாக வேண்டும் என்கிற அடிப்படையில், நாற்பத்தி எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டு வந்திருக்கும் கர்ணனை பெரிய தாம்பாளத் தட்டில் ஆரத்தியெடுத்து வரவேற்போம்.